"ஒரு விருதுக்குப் பின்னால் எவ்வளவு வலி இருக்கிறது தெரியுமா?" – மேடையில் கண்கலங்கிய சினேகா
Do you know how much pain lies behind an award Sneha tearful on stage
தமிழ் சினிமாவில் “புன்னகையரசி” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை சினேகா, அவள் விகடன் விருது விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. ஹீரோயினாக இருந்து தற்போது துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனது வாழ்க்கைப் பயணத்தின் வலிகளை மேடையில் பகிர்ந்துகொண்டார்.
அவள் ஐகான் விருதை இயக்குநர் கரு. பழனியப்பன் வழங்கிய நிலையில், அந்த தருணம் சினேகாவுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
விருதை பெற்றுக்கொண்ட பிறகு பேசிய சினேகா, சினிமாவுக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பெரிய விபத்தில் சிக்கியதாக கூறினார். அந்த விபத்தில் கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன், “எழுந்து நடக்கவே 8 மாதங்கள் ஆகும்” என மருத்துவர்கள் தெரிவித்ததாக நினைவுகூர்ந்தார்.
அந்த நேரத்தில் தான் ‘பார்த்திபன் கனவு’ படத்தின் கதையை கரு. பழனியப்பன் கூறியதாகவும், “நான் நடக்கவே முடியாத நிலையில் இருக்கிறேன்; என்ன நம்பிக்கையில் கதை சொல்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “இன்னும் ஒரு மாதத்தில் நடந்து விடுவீர்கள்” என்று அவர் தைரியம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
அந்த நம்பிக்கையே தன்னை மீண்டும் எழுந்து நிற்க வைத்ததாகவும், ஒன்றரை மாதங்களில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும் சினேகா உருக்கமாக கூறினார்.
‘பார்த்திபன் கனவு’ படத்தில் நடித்த மற்ற அனைவருக்கும் விருது கிடைத்த நிலையில், தனக்கு அங்கீகாரம் கிடைக்காதது மனவேதனை அளித்ததாகவும் சினேகா தெரிவித்தார். அதேபோல் ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பட்டாசு போன்ற பல படங்களுக்கும் விருது கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
“போகப் போக அது பழகிவிட்டது. விருதை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பதே பெரிய விஷயம் என்பதை புரிந்துகொண்டேன்” என்றார்.
‘ஆட்டோகிராப்’ படம் மீண்டும் வெளியானபோது பலரும் அழைத்து வாழ்த்தியதாகவும், அந்த கதாபாத்திரம் இன்னும் மக்களின் மனதில் இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன் என்றும் தெரிவித்தார்.
‘பட்டாசு’ படத்தில் நடித்தபோது கர்ப்பமாக இருந்ததாகவும், பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் ‘கோட்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.
“இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் ரசிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தான். இந்த விருதின் பின்னால் எவ்வளவு வலி, அவமானங்கள் இருக்கின்றன என்பதை சொல்ல முடியாது” என சினேகா கண்கலங்கினார்.அவரது இந்த உரை விழாவில் கலந்து கொண்டவர்களை உணர்ச்சியில் ஆழ்த்தியது.
English Summary
Do you know how much pain lies behind an award Sneha tearful on stage