கொடநாடு வழக்கு || எடப்பாடி பழனிச்சாமிக்கும் தொடர்பு.!! பரபரப்பை கிளப்பிய முக்கிய புள்ளி.!!
Kanagaraj brother accused of being connected to EPS in KodaNadu case
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால் இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் உயிரிழந்ததிலிருந்து அவருடைய அண்ணன் தனபால் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக இந்த வழக்கில் முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனகராஜன் அண்ணன் தனபால் சிபிசிஐடி போலீசாரால் விசாரணைக்காக நீலகிரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு மேச்சேரியில் நடைபெற்ற நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த பிறகு கொடநாடு வழக்கு தொடர்பாக மிக முக்கியமான தகவலை வெளியிடுவதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நில மோசடி வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த தனபால் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் நடைபெற்றது. அவர் சொல்லி தான் என்னுடைய தம்பி கனகராஜ் கொடநாடு சம்பவத்தை அரங்கேற்றினார்.
என்னுடைய தம்பி கொள்ளை அடித்துக் கொண்டு திரும்பியபோது பெருந்துறையில் எதேர்ச்சையாக சந்திக்க நேர்ந்தது. அப்போது 5 பெரிய பைகளை காட்டினார். அந்தப் பைகளில் ஏராளமான ஆவணங்கள் இருந்தன. அந்த 5 பைகளில் 3 பைகள் சங்ககிரியில் உள்ள ஒரு முக்கிய பிரமுகரிடமும், மேலும் 2 பைகள் சேலத்தில் உள்ள முக்கிய பிரமுகரிடமும் கொடுக்கப்பட்டன.

எனவே எடப்பாடி பழனிச்சாமியை இந்த வழக்கில் விசாரித்தால் உண்மை தெரிய வரும். அந்த சமயத்தில் கனகராஜ் பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டுகளை காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் பெற்றுக்கொண்டார். எனவே அவரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து நான் வெளியே கூறினால் எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து என்பதால் இதுவரை தெரிவிக்காமல் இருந்தேன்.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை உடனடியாக விசாரிக்க வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் கனகராஜன் சகோதரர் தனபால் கோரிக்கை வைத்துள்ளார். அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
Kanagaraj brother accused of being connected to EPS in KodaNadu case