ரூ.15,300 கோடி முதலீடு...! அடுத்த கட்ட நடவடிக்கை...! லண்டன் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் விஜய் தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்...!
Investment 15300 crore Next step High level meeting today under chairmanship Chief Minister Vijay regarding implementation London agreements
லண்டன் பயணத்தின்போது ஈர்க்கப்பட்ட ரூ.15,300 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை நடைமுறைக்கு கொண்டு வருவது மற்றும் புதிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த 12-ந்தேதி, தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் தடத்தை நேரில் பார்வையிட்டார்.

அங்கு பந்தயக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பந்தயத் தடத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து, கடந்த 14-ந்தேதி லண்டனில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதங்கள் இடம்பெற்றன.
இதன் மூலம் மொத்தம் ரூ.15,300 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களை அடுத்தகட்டமாக செயல்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
முதலீட்டு திட்டங்களின் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதேபோல், வருகிற 22-ந்தேதி தொடங்கப்பட உள்ள காலை உணவுத் திட்ட விரிவாக்கம் குறித்த ஏற்பாடுகள் மற்றும் 25-ந்தேதி தொடங்கப்பட உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான பணிகள் குறித்தும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா நடைபெறும் தேதி, இடம் மற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
English Summary
Investment 15300 crore Next step High level meeting today under chairmanship Chief Minister Vijay regarding implementation London agreements