தமிழக அரசின் அலட்சியம் | உயர்நீதிமன்றம் ஆணையிட்டு 50 நாட்களாகி விட்டது - டாக்டர் இராமதாஸ்!
Dr Ramadoss Say About Subsidy for Pensioners
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நவம்பர் மாத ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு 50 நாட்களாகி விட்ட நிலையில், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

நவம்பர் மாத ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ளது. போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறித்த அறிக்கையை நவம்பர் 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.
போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் 89 ஆயிரம் பேருக்கு கடந்த 83 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல துறைகளின் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு மட்டும் மறுப்பது நியாயமல்ல.

எனவே, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு தீப ஒளி பரிசாக அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த இரு ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Dr Ramadoss Say About Subsidy for Pensioners