திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: ஒரு வாக்கு வித்தியாசம் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
DMK Ex minister periyakaruppan election case against TVK MLA
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள தபால் வாக்கு தொடர்பான குளறுபடி, தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியகருப்பன் தரப்பு வாதம்: தமிழகத்தில் "திருப்பத்தூர்" என்ற பெயரில் இரண்டு தொகுதிகள் உள்ளன (சிவகங்கை மாவட்டம் - தொகுதி எண் 185; திருப்பத்தூர் மாவட்டம் - தொகுதி எண் 50).
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாக்காளரின் தபால் வாக்குச் சீட்டு, தவறுதலாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு அந்த வாக்குத் தொகுதி எண் மாறாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு வாக்கு மட்டும் சரியாகச் சிவகங்கை திருப்பத்தூர் தொகுதிக்கு வந்து எண்ணப்பட்டிருந்தால், தேர்தல் முடிவே மாறியிருக்கும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் கேள்வி மற்றும் உத்தரவு:
வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையின் போதே பெரியகருப்பன் தரப்பில் இந்தப் புகார் முன்வைக்கப்பட்டும், தேர்தல் அதிகாரிகள் அதனை ஏன் பரிசீலிக்கவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை எனத் தீவிரமாகக் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு (மே 11) ஒத்திவைத்தனர். இந்த ஒரு தபால் வாக்கின் செல்லுபடித்தன்மை குறித்த நீதிமன்றத்தின் முடிவு, தொகுதியின் வெற்றி-தோல்வியை மாற்றியமைக்குமா என்பது நாளைத் தெரியவரும்.
English Summary
DMK Ex minister periyakaruppan election case against TVK MLA