"இனிமே இப்படி தான் வேலு"... அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு குறித்து பாஜக நிர்வாகி ட்விட்..!!
BJP executive tweet about AIADMK executives meeting Annamalai
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த 4ம் தேதி காலமானதை அடுத்து அச்சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மூன்று மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. அதிமுக கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவு கோரும் முனைப்பில் பழனிச்சாமி அணியைச் சார்ந்த அதிமுகவினர் ஈடுபட்டனர். அதே வேளையில் நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த இரு அணிகளும் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான மதுவந்தி அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார். பாஜக ஆதரவாளர் ஒருவர் "முதன்முறையாக அதிமுக தலைவர்கள் பாஜக அலுவலகம் வந்து இடைத்தேர்தலில் ஒருமித்த வேட்பாளர் நிறுத்துவது குறித்து ஆலோசித்து உள்ளனர்" என டவிட் செய்திருந்தார்.
அதனை ரிட்வீட் செய்த மதுவந்தி "இனிமே இப்படித்தான் வேலு என்ற வசனம் நினைவுக்கு வருகிறது" என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் "அ.தி.மு.க இன்று கமலாலயத்திற்கு வந்ததில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டரில் சிலர் முன்னும் பின்னுமாக செல்வதை கண்டு வியப்படைகிறேன். இது தான் அண்ணாமலையின் ஆரம்பம்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
English Summary
BJP executive tweet about AIADMK executives meeting Annamalai