வடிகட்டுன பொய்.. பாராங்கல்லையே சோத்துல மறைக்கும் திமுக! ரவுண்டு கட்டிய ஜெயக்குமார்!
AIADMK Jayakumar criticized DMK MKStalin
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளான இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் ஜமுகாலத்தில வடிகட்டின பொய் இது என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதை விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அவர் நாடே பற்றி எரிகிறது, டெங்கு காய்ச்சல் கடுமையாக பரவுகிறது. அதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஓட்ட நாயகன் 16 கிலோமீட்டர் நடந்து சென்று மலையின் மீது ஏறி பார்த்ததாக செய்தி வருகிறது. எப்போதும் அவர் வாக்கிங் செல்லும் செய்தி தான் வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை கலாய்த்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்து தட்டுப்பாடு நீடிக்கிறது. அதைக் கூட கவனிக்காமல் இருப்பது சுகாதாரத் துறையின் தோல்வி என கடுமையாக விமர்சனம் செய்தார். மற்றொருபுறம் மின்சார கட்டணம், சொத்து வரி, பால் விலை, பதிவு துறை கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி மக்களின் முதுகில் பெரிய சுமையை வைத்து விட்டு யானை பசிக்கு சோள பொரி போல ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.

2 கோடி ரேஷன் கார்டுகளுக்க மகளிர் உரிமைத் தொகை தருவதாக கூறிவிட்டு விண்ணப்பித்த ஒன்றரை கோடி பயனாளர்களில் 56 லட்சம் பேருக்கு தரவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றுவதாக சொன்னார்கள் மாற்றி விட்டார்களா? கல்வி கடன் ரத்து செய்து விட்டார்களா? பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை முடக்கி விட்டார்கள். நகை கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கூறி 10% தள்ளுபடி செய்துவிட்டு 90% பயனாளர்களின் நகை கடனை தள்ளுபடி செய்யவில்லை. இதுபோல சோற்றில் பெரிய பாராங்கல்லையே மறைக்கக் கூடிய கட்சிதான் திமுக என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
AIADMK Jayakumar criticized DMK MKStalin