விழுப்புரத்திற்கு எண்ட்ரி கொடுத்த ஜெயக்குமார்! அதிமுகவினரால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு! காரணம் என்ன?
AIADMK Jayakumar appeared villupuram court today in ponmudi quarry scam case
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த 2006-2011 மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.37 கோடி இழப்பு ஏற்பட்டது.
இதனால் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட 8 பேர் மீது விழுப்புரம் காவல்துறையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.

அவர்களில் முக்கியமான சாட்சிகளாக கருதப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் அரசு தரப்புக்கு பாதகமாக சாட்சியம் அளித்துள்ளதால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மூலமாக கடந்த செப்டம்பர் 8ம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக எங்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு கடந்த செப்டம்பர் 12ம் தேதி விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால் விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும் அதிமுக பாஜக கூட்டணி குறித்து ஊடகங்கள் முன்பு பேட்டியளித்த ஜெயக்குமார் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இன்று மாலை 3:45 மணியளவில் நடைபெறும் அதிமுக மாவட்ட பொது செயலாளர் கூட்டத்தில் பாஜக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
AIADMK Jayakumar appeared villupuram court today in ponmudi quarry scam case