987 ஹெக்டேர் மணல் கொள்ளை! - திமுக அரசை நேரடியாக குறிவைத்த ஓ.பி.எஸ்...!
987 hectares sand looted OPS directly targets DMK government
தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ள முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. ஆட்சியின் கீழ் மாநிலம் சட்டவிரோத செயல்களின் மையமாக மாறி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.அவர் குறிப்பிட்டதாவது,"தற்போதைய ஆட்சி பொறுப்பேற்றது முதலாக மணல் மாபியா, ரேஷன் அரிசி கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், கள்ளச்சாராய வியாபாரம் போன்ற சட்டவிரோதச் செயல்கள் தீவிரமாக அதிகரித்துள்ளன.
இதன் விளைவாக தமிழ்நாடு, குற்றவாளிகளின் பாதுகாப்புத் தங்குமிடமாக மாறி வருவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதேவேளை, 2021-க்கு முன்பே, “தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மணலை சுதந்திரமாக அள்ளிச் சென்றாலும்கூட எந்த அதிகாரியும் தடுக்கமாட்டார்” என முன்னாள் தி.மு.க. அமைச்சர் ஒருவர் கூறியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்றார்.

2024 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை நடத்திய ஆய்வில்,28 மணல் குவாரிகளில்,987 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்ததில்,4,730 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு உள்ள மணல் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,மாநிலத்திற்கு வெறும் 36 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வந்ததாகவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 4,700 கோடி ரூபாய் கரும்பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்பதை ED கண்டறிந்து, இதுகுறித்து காவல் துறையின் உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.மேலும், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை அமராவதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் மணல் குவாரி இயக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தபோதும், கரூர் மாவட்டத்தின் ராஜபுரம், சின்னதாராபுரம், அணைப்பாளையம், சுக்காலியூர், பெரிய ஆண்டாங்கோவில், கோயம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை வெள்ளம் போல நடைபெற்று வருவதாகவும், போலீசும் வருவாய் துறையும் இதைக் கண்டும் காணாதது போல நடப்பதாகவும்OPS குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகள் அமைதியாக இருப்பதற்கு ஆளும் கட்சியின் செல்வாக்கு காரணம் என்பது தெளிவாக இருக்கிறது; இது நேரடியாக நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவும் அவர் கண்டித்துள்ளார்.
மணல் கொள்ளை தொடர்ந்தால் நிலத்தடி நீர் தாறுமாறாக குறைந்து, பொதுமக்கள் குடிநீர் நெருக்கடி சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரித்த அவர்,முதல்வர் நேரடி தலையீடு செய்து, மணல் மாபியாவை ஒழிக்க உடனடி தீவிர நடவடிக்கை எடுத்து, சட்டவிரோதங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் கொண்டு வந்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உரிமை மீட்பு குழுவின் சார்பில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
English Summary
987 hectares sand looted OPS directly targets DMK government