சூனியம் வைத்துவிட்டதாக கூறி கணவன், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்!
Talangana Village people atack viral video
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியில் சூனியம் செய்துவிட்டதாக கூறி கணவனையும் மனைவியையும் கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைரலான அந்த வீடியோவில் ஒரு தம்பதி மரத்தில் கட்டப்பட்டிருப்பதும் கிராம மக்கள் அங்கு கூடியிருப்பதும் பதிவாகியுள்ளது.
2 நாட்களுக்கு முன்பு சதாசிவப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொல்குரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யாதையா மற்றும் அவரது மனைவி ஷியாமம்மா இருவரும் சூனியம் செய்ததாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து கிராம மக்களில் சிலர் அவர்களது வீட்டுக்குள் புகுந்து அவர்களை இழுத்துச் வந்து ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அவர்களை மீட்டுள்ளனர்.
அவர்களுக்கு பலத்த காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
English Summary
Talangana Village people atack viral video