''அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது'': பிரதமர் மோடியை சந்தித்துள்ள சுபான்ஷு சுக்லா..!
Subhanshu Shukla met Prime Minister Modi in Delhi
அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பியுள்ள விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு டில்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் வரவேற்றார். அப்போது, மூவர்ணக் கொடியை அசைத்தும், மேளதாளங்கள் முழங்கியும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உத்தர பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, விண்வெளிக்கு இந்திய வீரர்களை அனுப்பி வைக்கும் இஸ்ரோவின், 'ககன்யான்' கனவு திட்டத்துக்காக தேர்வான நான்கு இந்திய வீரர்களில் ஒருவராவார்.

அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனத்தின், 'ஆக்சியம் - 4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற நான்கு பேரில் இவரும் ஒருவர். இக்குழுவினர் கடந்த ஜூலை 15-ஆம் தேதி பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
இந்நிலையில் தாயகம் திரும்பியுள்ள சுக்லா, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தனது அனுபவங்களை அவர் மோடியின் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், ஆக்ஸியம் 4 திட்டத்தின் அடையாளத்தை பிரதமரிடம் காட்டியதுடன், விண்வெளிமையத்தில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களையும் காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பில் சுக்லாவை கை கொடுத்தும், கட்டியணைத்தும் பிரதமர் மோடி வரவேற்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், சுபான்ஷு சுக்லாவை சந்தித்தது குறித்து மோடி தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''சுபன்ஷு சுக்லாவுடன் ஒரு சிறந்த உரையாடல் இருந்தது. விண்வெளியில் அவரது அனுபவங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் லட்சிய ககன்யான் திட்டம் உட்பட பல்வேறு தலைப்புகளில் நாங்கள் விவாதித்தோம். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது''. என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Subhanshu Shukla met Prime Minister Modi in Delhi