வங்கதேச வான்வெளியை பயன்படுத்த ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு தடை; நடந்தது என்ன..?
SpiceJet flights banned from using Bangladeshi airspace
ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனம் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு, வங்கதேசம் தடை விதித்துள்ளது. வான்வெளிப் போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தொகை சுமார் ரூ.42 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,வங்கதேச வான்வெளியைப் பயன்படுத்த முடியாததால், கொல்கத்தாவிலிருந்து குவஹாத்தி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல பல்வேறு பாதைகளை ஸ்பைஸ்ஜெட் விமானம் சுத்தி வருகிறது. இதனால் பயணநேரமும் அதிகரித்து, எரிபொருள் செலவும் கூடியுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இதற்குத் தீர்வு காணப்படும் என்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாற்றுப் பாதைகள் மூலம் தங்களது விமானச் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படுவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
''இவை இத்துறையில் வழக்கமாக எழும் பிரச்சனைகளே; இதற்கு விரைவில் தீர்வு காண நாங்கள் ஆக்கப்பூர்வமாக பணியாற்றி வருகிறோம். எங்களது விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை; ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி எங்களது திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்'' என்று என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
SpiceJet flights banned from using Bangladeshi airspace