வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; ரூல்ஸை மீறினால் ரூ.25000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை..!
Chennai Corporation warns of Rs 25000 fine for vehicles causing air pollution
கட்டுமான விதிமுறைகளைப் பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:-
''சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் ''தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025''நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காற்றில் கலக்கும் நுண்துகள்களைக் குறைக்கும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளும் தார்ப்பாய் கொண்டு முழுமையாக மூடப்படாமல் இருத்தல்.

கட்டுமானப் பொருட்கள் அல்லது தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல். நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், அபராதத் தொகையாக ரூ.25,000/- அந்த இடத்திலேயே விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.
சென்னை மாநகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Corporation warns of Rs 25000 fine for vehicles causing air pollution