நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருகிறாரா..? அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் கூறுவது என்ன..?
Actor Suriya has no intention of entering politics says charity organizer Hariraj
நடிகர் சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்த எண்ணமும் இல்லை எனவும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல், மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க அமைப்பாளர் ஹரிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''நேற்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இரா.வீரமணி, 'இது என்னுடைய தனிப்பட்ட கருத்து' என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இரா.வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் சூர்யாவுக்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை.
அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூகச் சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் நிலைப்பாடுகள் செயல் தலைவர் R.A. ராஜ் மற்றும் அமைப்பாளர் G.ஹரிராஜ் ஆகியோரின் மூலமாக மட்டுமே வெளியிடப்படும்.
எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பாமல், மன்றத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Actor Suriya has no intention of entering politics says charity organizer Hariraj