எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க துடிக்கும் சசிகலா; அதிமுகவிற்கு போட்டியாக வேட்பாளர்களை நிறுத்த திட்டம்..!
Sasikala plans to field candidates to compete with Edappadi Palaniswamis AIADMK candidates
அதிமுகவில் மீண்டும் இணைய முடியாத நிலையில் உள்ள சசிகலா, தனது ஆதரவாளர்களை சந்தித்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையின்படி, தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகவிற்கு எதிராக நேரடியாக வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சசிகலா கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிப்பதோடு, முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் போட்டியிடவுள்ள தொகுதிகளையும் அறிவிக்க உள்ளதாக அறிய முடிகிறது.
இதுகுறித்து சசிகலாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், துரோகத்தால் தான் வீழ்த்தப்பட்டதாக சசிகலா நினைப்பதாகவும், தனக்கு துரோகம் செய்தவர்களை பழிவாங்க சசிகலா முடிவு செய்து விட்டார். என்று கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தை மீண்டும் தான் உயிர்ப்பித்த நிலையில், தன்னை அரசியலை விட்டே வெளியேற்ற எடப்பாடி முடிவு செய்துள்ளதால் கடும் ஆத்திரத்தில் சசிகலா உள்ளதாக கூறியுள்ளனர்.இதனால், இந்த தேர்தலில் எடப்பாடிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அவரது விசுவாசிகள் கூறியுள்ளனர்.
குறிப்பாக, தென்மாவட்டங்களை பொறுத்தவரை திருமங்கலம் (உதயகுமார் வென்ற தொகுதி), மேலூர், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு மற்றும் சோழவந்தான் தொகுதிகளில் நிச்சயம் சசிகலா வேட்பாளர்களை நிறுத்துவார் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக, மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை 06 தொகுதிகளில் சசிகலா தரப்பில் வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள் என்றும், நிலக்கோட்டை, ஆண்டிபட்டி, போடி, காரைக்குடி, சிவகங்கை, முதுகுளத்தூர், திருவாடானை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, நெல்லை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருமயம், புதுக்கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் பட்டியலில் முன்னுரிமையில் உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சசிகலா அடையாளம் கண்டுள்ளார் என்றும், பசும்பொன் கூட்டத்தில் கட்சி அறிவிப்போடு நிற்காமல் போட்டியிடவுள்ள முதல்கட்ட தொகுதிகளின் பட்டியலையும் அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், சசிகலாவின் இந்த நடவடிக்கை அதிமுகவில் இருக்கும் மாஜி அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்று சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
English Summary
Sasikala plans to field candidates to compete with Edappadi Palaniswamis AIADMK candidates