நீதிமன்ற மோதலுக்கு முற்றுப்புள்ளி...! பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற திமுக எம்.பி டி.ஆர்.பாலு...!
End court battle DMK MP Dr Balu withdraws case against BJP leader Annamalai
தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்பட்ட காலத்தில், அண்ணாமலை கடந்த 2023-ஆம் ஆண்டு ‘டி.எம்.கே. பைல்ஸ்’ என்ற பெயரில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பட்டியல் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது.
அப்போது, தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் சொத்து விவரங்கள் தொடர்பாகவும் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையான கருத்துகளை வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய டி.ஆர். பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், விசாரணையின் முக்கிய அம்சமாக டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலையே நேரடியாக குறுக்கு விசாரணை மேற்கொண்டது கவனத்தை ஈர்த்தது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
இந்த சூழலில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அடுத்த கட்ட விசாரணையிலும் டி.ஆர். பாலுவிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த உள்ளதாக அண்ணாமலை முன்பே தெரிவித்திருந்தார்.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை டி.ஆர். பாலு திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.தமிழக அரசியல் களத்தில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இந்த முடிவுக்கு பின்னணி காரணமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆட்சி மாற்றத்துடன் அரசியல் சமன்பாடுகளும் மாறியுள்ள நிலையில், அண்ணாமலை பா.ஜ.க.-விலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தை தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.மாறிவரும் அரசியல் சூழல், புதிய கூட்டணி கணக்குகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளை கருத்தில் கொண்டு டி.ஆர். பாலு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
End court battle DMK MP Dr Balu withdraws case against BJP leader Annamalai