டில்லி வந்திறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு; நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி..!
Prime Minister Modi personally welcomed Russian President Vladimir Putin upon his arrival in Delhi
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரண்டு நாள் பயணமாக இன்று (டிசம்பர் 04) இரவு டில்லி வந்தடைந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். விமான நிலையத்தில் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
ரஷ்ய அதிபர் புடின், கடந்த 2021 டிசம்பரில் உக்ரைன் மீது போர் தொடங்குவதற்கு முன்னர் இந்தியா வருகை தந்தார். தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து இன்று டில்லி வந்துள்ளார்.
இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு, இன்று பிரதமர் இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணத்தில் டில்லியில் நடக்க உள்ள, 23-வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்கிறார்.
அத்துடன், நாளை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்முவையும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் புடின் சந்திக்க உள்ளார்.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில் இந்தியா வந்துள்ள புடினுடன் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரஷ்ய அதிபர் புடின் வருகையை முன்னிட்டு டில்லி விமான நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Prime Minister Modi personally welcomed Russian President Vladimir Putin upon his arrival in Delhi