குடிநீர் பாட்டில்களுக்கு புதிய சோதனை விதிகள்...! - FSSAI அறிவிப்பு
New testing rules for drinking water bottles FSSAI announcement
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீருக்கு புதிய தரக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதன்படி, வரும் ஜனவரி 1 முதல், பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய தரப்பரிசோதனை விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது.
இதுவரை, நாட்டில் பாட்டிலில் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள்,இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) வழங்கும் சான்றிதழையும்,உணவு பாதுகாப்புத்துறை வழங்கும் உரிமத்தையும் பெறுவது கட்டாயமாக இருந்து வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு, BIS சான்றிதழ் கட்டாயம் என்ற விதி நீக்கப்பட்டதுடன், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குடிநீர் மற்றும் மினரல் குடிநீர் தயாரிப்புகளை “அதிக ஆபத்துமிக்க உணவுப் பொருள்” பிரிவில் FSSAI சேர்த்தது.இந்த நிலையில், நேற்று வெளியிட்ட புதிய உத்தரவில், FSSAI தெரிவித்ததாவது,"பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் நிறுவனங்களுக்கு BIS சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இனி இல்லை.
அதற்கு பதிலாக, புதிய தரப்பரிசோதனை நடைமுறைகள் வரும் ஜனவரி 1 முதல் கட்டாயமாக அமலுக்கு வருகிறது.இந்திய சந்தையில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குடிநீரின் தரம், பாதுகாப்பு, அதில் உள்ள தாதுப்பொருட்களின் அளவு ஆகியவற்றுக்கு FSSAI தெளிவான வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
அதன்படி, குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் (microbial parameters) குறித்து மாதம் ஒருமுறை கட்டாயமாக பரிசோதனை நடத்த வேண்டும்.பிற தர மற்றும் பாதுகாப்பு அளவீடுகள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும், உணவு தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் இரண்டு ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து சான்றிதழ் பெற தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவுக்கு இணங்க, BIS சான்றிதழ் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், இனி குடிநீர் நிறுவனங்கள் FSSAI வழங்கும் உரிமம் ஒன்றே பெற்றால் போதுமானது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New testing rules for drinking water bottles FSSAI announcement