உ.பி.,யில் வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி கூட்டு பலாத்காரம்..!
Mute and deaf disabled woman gang raped in UP
உத்தர பிரதேசத்தில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணைபைக்கில் துரத்திச் சென்ற இளைஞர்கள், மாவட்ட நீதிபதி, எஸ்.பி., உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் குடியிருப்பு அருகே வைத்து இவ்வாறு மோசம் செய்துள்ளமை அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் உத்தரப் பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் இரு தினங்களுக்கு முன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.
இரவு நேரத்தில் இளம்பெண் தனியாக செல்வதை கண்ட ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் வீட்டில் விடுவதாக கூறி அழைத்துள்ளார். அவரை நம்பி அந்த பெண்ணும் பைக்கில் ஏறி சென்றுள்ளார். ஆனால் அவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன், தன் நண்பர்களையும் வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய பெண்ணை, அவர்கள் விடாது நான்கைந்து பைக்குகளில் துரத்திச் சென்றுள்ளனர். வாய் பேச முடியாத, காத்து கேளாத குறித்த பெண் பயத்தில் சாலையில் வெறுங்காலில் ஓடுவது, அந்த வழியில் இருந்த ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் வீட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே, நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால், குடும் பத்தினர் பதற்றத்துடன் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது, ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு, புதரில் மயக்கமடைந்த நிலையில் மகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண் தெரிவித்த தகவலின் அடிப்படையில், குற்றவாளிகளை போலீசார் தேடியுள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், இந்த கொடூர செயலில் ஈடுப்பட்ட இருவரை அடையாளம் கண்டு சுற்றி வளைத்த போது அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து என்கவுன்ட்டர் செய்து இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், ஏனைய நபர்களை தேடி வருகின்றனர்.
இதேவேளை, பல்ராம்பூர் மாவட்ட நீதிபதி, எஸ்.பி., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குடியிருப்பு நிறைந்த பகுதியில், இந்த குற்றம் நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, இளம்பெண் மயங்கிக்கிடந்த இடத்தின் அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என கூறப்படுவது நாட்டில் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
English Summary
Mute and deaf disabled woman gang raped in UP