மேற்கு வங்கத்தில் வன்முறை: சாலை விபத்தில் உயிரிழந்த உணவு டெலிவரி முகவர்: போராட்டத்தில் ஈடுப்பட்ட உள்ளூர்வாசிகள்: கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்திய போலீசார்..!
Police fire tear gas at locals protesting for food delivery man killed in road accident in West Bengal
மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவின் சால்ட் லேக்-கெஷ்டோபூர் பகுதியில் இன்று நடந்த சாலை விபத்தில் உணவு டெலிவரி முகவர் ஒருவர் உயிரிழந்தார். கெஷ்டோபூர் மற்றும் சால்ட் லேக் இடையே உள்ள 08-வது நடைபாதை பாலம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் போலீசாரின் அலட்சியத்தை கண்டித்து உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்.
வீதியில் போராட்டம் நடத்திய கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அங்கு நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பிதான்நகர் துணை ஆணையர் அனீஷ் சர்க்கார் கூறியதாவது:

வேகமாக வந்த கார் மற்ற வாகனங்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மோதலில் கார் தீப்பிடித்ததை அடுத்து, அங்கு தீயணைப்பு படையினர் வந்தனர். அப்போது அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகின என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அங்கு திரண்ட மக்களை அமைதிப்படுத்த முயன்று வீடு திரும்புமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால், அவர்கள் பாலத்தின் மறுபுறம் சென்ற பிறகு, எங்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர், அதனால், கூட்டத்தைக் கலைக்க நாங்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் மற்றும் டெலிவரி முகவரின் மரணத்திற்கு வழி வகுத்த சூழ்நிலைகள் குறித்து சால்ட் லேக் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அனீஷ் சர்க்கார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Police fire tear gas at locals protesting for food delivery man killed in road accident in West Bengal