நிர்வாணம் வேறு... ஆபாசம் வேறு... ரெஹானா பாத்திமா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு...!
Kerala High court says Nudity not always linked to obscenity
ரெஹானா பாத்திமாவின் அரை நிர்வாண வீடியோ வழக்கில், நிர்வாணம் வேறு, ஆபாசம் வேறு என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற பெண் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது அரை நிர்வாண உடலில், தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு யூடியூப் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ 'பாடி அண்டு பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் பகிரப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் இவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து வழக்குகளை ரத்து செய்யும்படி ரெஹானா விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் ரெஹானா கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதில் நிர்வாணத்தை ஆபாசத்துடன் இணைக்கக் கூடாது.
ஒரு தாயின் மேல் உடம்பில், சொந்த குழந்தையால், கலை படைப்பிற்காக வண்ணம் தீட்டுவது பாலியல் செயலை தூண்டுவது கிடையாது. அதில் பாலியல் தூண்டல் அல்லது பாலியல் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று கூறுவதற்கில்லை. ஆண்கள் மேலாடை இல்லாமல் இருப்பது ஆபாசம், அநாகரீகம் என்று பார்ப்பது இல்லை. பாலுறவு ரீதியாகவும் பார்ப்பதில்லை. ஆனால், பெண்களுக்கு அவ்வாறு பார்ப்பதில்லை.
மேலும் கலையை வெளிப்படுத்தும் இந்த செயலில், குழந்தையை பாலியல் செயலை தூண்ட பயன்படுத்துகின்றனர் என கூறுவது இரக்கமற்றது என்றும், அந்த வீடியோவில் குழந்தையை ஆபாசத்துடன் பயன்படுத்தப்பட்டு உள்ளனர் என்று கூறும் வகையில் எந்த விசயங்களும் இல்லை. மேலும் இந்த வீடியோவில் எவ்வித பாலியல் சார்ந்த தவறும் இல்லை என்பதால், இந்த வழக்கில் இருந்து ரெஹானா பாத்திமாவை விடுவிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
English Summary
Kerala High court says Nudity not always linked to obscenity