ஜூன் 16 முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை!
Karnataka HC bike taxi
கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு போக்குவரத்துத்துறை விதித்த தடையை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இதனால் ஜூன் 16 முதல் மாநிலத்தில் பைக் டாக்ஸி ஓட்டத் தடை அமலாகிறது.
தடை உத்தரவை எதிர்த்து பைக் டாக்ஸி நிறுவனங்கள் மனுதாக்கல் செய்த நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வரராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அங்கு ஆஜராகிய அரசு தரப்பின் சட்டதுறை அதிகாரி சசிகிரண்ஷெட்டி, “நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உரிய அனுமதியுடன் டாக்ஸியாக இயங்குகின்றன.
ஆனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை சேவைக்கு மாற்ற முடியாது; இதற்கு நாடு முழுவதும் 8 மாநிலங்களில்தான் அனுமதி உள்ளது” என்றார்.
மனுதாரர் சார்பில், “இரு சக்கர வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. விதிமுறை வகுத்தால், பசுமை நிற பதிவு தாளுடன் சேவை அனுமதிக்க முடியும்” என வாதமிட்டார்.
இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு, நீதிபதிகள் விசாரணையை ஜூன் 24-க்கு ஒத்திவைத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இருப்பினும், தடையை நிறுத்தும் இடைக்கால உத்தரவை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால், பைக் டாக்ஸி சேவை 16ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.