ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, தேர்தல் எப்போது? மத்திய அரசு விளக்கம்!
Central Govt explained to Supreme Court on the Jammu and Kashmir issue
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370 நீக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.
அதற்கான பதிலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தீவிரவாத தாக்குதல்கள் 45.2% குறைந்துள்ளது. கற்களை வீசுவது, அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவது போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் 97% குறைந்துள்ளது.

ராணுவ வீரர்களின் உயிர் இழப்பு 65% வரை குறைந்துள்ளது. தீவிரவாத இயக்கத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வேலைவாய்ப்பு பெற்று மாநிலத்தின் குடியேறி வருகின்றனர் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலில் பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டும், அதன் பிறகு மாவட்ட அளவிலான தேர்தலை நடத்த வேண்டும், பின்னர் மாநில அளவிலான தேர்தலை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் வாக்காளர் பட்டியல் முழுமையாக நிறைவு பெறும் எனவும், இனி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையமும், இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தனது விளக்கத்தில் தெளிவுபடுத்தி உள்ளது.
யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்தை எப்போது வழங்கப்படும் என்று கால நிர்ணயம் செய்ய முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுமையாக மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திய பிறகு தான் முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான வாய்ப்புள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
English Summary
Central Govt explained to Supreme Court on the Jammu and Kashmir issue