கிரேன் பழுதாகி அந்தரத்தில் தொங்கியதால் ஆத்திரம்; நகராட்சி ஊழியரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்பி; எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்..!
BJP MP slaps municipal employee in anger after crane breaks down and hangs in the air
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிரேன் ஓட்டுநரை பொதுவெளியில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் விழா, மத்தியப் பிரதேசம் மாநிலம், சத்னாவில் உள்ள செமரியா சவுக் பகுதியில் நடந்தது.
இந்த விழாவில் சத்னா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங் கலந்துக் கொண்டார். அப்போது, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக, நகராட்சிக்குச் சொந்தமான ஹைட்ராலிக் கிரேன் ஒன்றில் எம்பி ஏறி மேலே சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் பழுதாகி, பாதியிலேயே அந்தரத்தில் நின்றுள்ளது. மீண்டும் கிரேன் இயக்கப்பட்டபோது குலுங்கியதால், கடும் ஆத்திரமடைந்த எம்.பி. கணேஷ் சிங், கடும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

கிரேன் மீண்டும் கீழே இறங்கியதும் கோபத்துடன் காணப்பட்ட அவர், கிரேனை இயக்கிய கணேஷ் குஷ்வாஹா என்ற நகராட்சி ஊழியரைத் தன் அருகே அழைத்த, அவரது கையைப் பிடித்து இழுத்து, அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்துள்ளார். இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் காணொலியாகப் பதிவு செய்ததால் பரபரப்பு நிலவியுள்ளது.
தற்போது இந்தக் காணொலி, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்.பி-யின் இந்தச் செயலுக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், 'இது பாஜக தலைவர்களின் அதிகார போதை மற்றும் மன்னராட்சி மனப்பான்மையைக் காட்டுகிறது' என்றும் விமர்சித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கிரேன் ஓட்டுநர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
BJP MP slaps municipal employee in anger after crane breaks down and hangs in the air