அரசு மருத்துவமனையில் நேர்ந்த கொடூரம்: பாதுகாப்பற்ற முறையில் ரத்தம் ஏற்றியதால் 05 குழந்தைகளுக்கு ‘எச்.ஐ.வி’ தொற்று: ஜார்கண்ட்டில் அதிர்ச்சி..!
05 children infected with HIV due to unsafe blood transfusion at Jharkhands Sadar Government Hospital
அரசு மருத்துவமனையில் பாதுகாப்பற்ற முறையில் ரத்தம் ஏற்றியதன் மூலம் ஐந்து குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார், ஜார்கண்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டம், சைபாசா நகரில் சதார் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தாலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த 07 வயது குழந்தை ஒருவருக்கு, ரத்தம் ஏற்றிய பிறகு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக கடந்த 24-ஆம் தேதி அக்குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஞ்சியில் இருந்து ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், சதார் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் நான்கு தாலசீமியா குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவக் குழுவின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையின் ரத்த வங்கியில் ரத்த மாதிரிப் பரிசோதனை, பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளில் கடுமையான குளறுபடிகள் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதார அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஷாந்தோ மஜி கூறுகையில், 'பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றியது மட்டுமே இதற்குக் காரணம் என்று தற்போதைக்கு முடிவுக்கு வர முடியாது. பாதுகாப்பற்ற ஊசிகள் போன்ற பிற வழிகளிலும் எச்.ஐ.வி. பரவ வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருத்துவமனையின் அலட்சியமான போக்கு தொடர்பான விவகாரத்தை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. அத்துடன், மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் அறிக்கையும் கேட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
English Summary
05 children infected with HIV due to unsafe blood transfusion at Jharkhands Sadar Government Hospital