தமிழகத்தில் அதிகரித்துள்ள எலி காய்ச்சல்: தேங்கியுள்ள மழைநீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம் என எச்சரிக்கை..!
Warning against walking barefoot in rainwater due to the increase in rat fever in Tamil Nadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 'தேங்கியுள்ள மழை நீரில், வெறும் காலில் நடக்க வேண்டாம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுழல் வடிவ நுண்ணுயிரியான, 'லெப்டோஸ்பைரா' எனப்படும் பாக்டீரியாவால், எலி காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளுக்கு பரவி, அதன் வாயிலாக, மனிதர்களிடம் தொற்றிக் கொள்ளும் நோயாகும். இது, சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக இந்த எலிக்காய்ச்சல் நாய்கள், பன்றிகள், கால்நடைகளின் சிறுநீர் வாயிலாகவும், குறிப்பாக எலிகளின் கழிவு வாயிலாகவும், மனிதர்களுக்கு பரவுகிறது. பொதுவாக மழைப்பொழிவுக்கு பின், நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படும். எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு, 'லெப்டோ ஸ்பைரோ சிஸ்' தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை, தமிழகம், குஜராத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களிலும், அந்தமான் - நிகோபர் தீவுகளிலும் தொடங்கியுள்ளது.

எலி காய்ச்சல் நோயை பரவலை கண்டறிய, மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உட்பட, 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு எலி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
எலி காய்ச்சல் பாதிப்பை உறுதிப்படுத்த, 'ஆர்.டி.பி.சி.ஆர்.,' பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது. தமிழகத்தில், 2021-இல் 1,046 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை, 2022-இல் 2,612 ஆகவும், 2023-இல் 3,002 ஆகவும் அதிகரித்தது.

கடந்த ஆண்டில் 2,000-க்கும் அதிகமானோருக்கு எலி காய்ச்சல் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை, 1,500க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உள்ள மாவட்டங்களில், மருத்துவ கண்காணிப்பு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் இடத்தில், நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, பொதுமக்கள், தேங்கியிருக்கும் மழை நீரில் வெறும் கால்களில் நடக்கக் கூடாது என்றும், தொற்று உள்ள உயிரினங்களின் கழிவுகள், மழை நீரில் கலந்திருக்கக் கூடும். அதில், கால் வைத்தால், நமது உடலிலும் தொற்று ஊடுருவ வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம் என்றும், வெளியே சென்று வந்த பின், கை, கால்களை நன்னீரில் நன்றாக சோப்பு போட்டு அலச வேண்டும் எட்ன்றும், முடிந்தால் குளிப்பது சிறந்தது என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Warning against walking barefoot in rainwater due to the increase in rat fever in Tamil Nadu