முதல்வரின் அடுத்த சிக்சர்.. குடிகாரர்களுக்கு விடியல்., பொதுமக்களுக்கு அவியல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுபானக்கடைகளுக்கு சேலம் மேட்டூரில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், கொரோனா ஊரடங்கில் வழங்கப்படும் தளர்வுகளில் அதுவும் ஒன்று என்பதை போல விளக்கம் அளித்தார். அமைச்சர்களும் பெரும்பாலும் இதனையே தெரிவித்தனர். 

ஒரு அமைச்சரோ அதற்கும் ஒரு படி மேலே சென்று, கர்நாடக மாநிலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் கூட மதுபான கடைகள் மூடப்படாமல் இருந்தது. இங்கு இப்போதுதானே திறந்து இருக்கிறோம். அதுவும் கொரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் மட்டும் திறந்துள்ளோம் என்று தெரிவித்து சென்றார். 

ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டதை அடுத்து, தமிழக மக்களுக்காக காணொளி வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலியான மதுபானங்கள் பெருகுவதை குறைக்க மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

ஒரு தமிழகத்தின் முதல்வர் பொறுப்பில் இருக்கும் நபர் இப்படியான கருத்துக்களை தெரிவித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், இந்த கூற்று அவர் கள்ளச்சாராயம் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை உறுதி செய்யும் வகையில் கூறியிருக்கிறார் என்றே பெரும்பாலும் எடுத்துக்கொள்ளப்படும். 

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வந்தாலும், அதனை மதுவிலக்கு காவல்துறையினர் கண்டறிந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை கைது செய்து வந்தாலும், அது தொடர்ந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் மதுவுக்கு அடிமையாகி இருந்த 70 விழுக்காடு நபர்கள் மதுபானம் கிடைக்காமல் மெல்ல மெல்ல அதனை மறந்து வந்தனர். 

30 விழுக்காடு நபர்கள் மட்டுமே மதுபானங்களுக்கு பதிலாக கள்ளச்சாராயம், சானிடைசரை குடிப்பது என இருந்து வந்தனர். வெறும் 30 விழுக்காடு குடிகாரர்களை திருப்திப்படுத்த, 70 விழுக்காடு நபர்களையும் மீண்டும் மதுபோதையில் அரசு விழ வைத்துள்ளது என்பதே நிதர்சனமாக உள்ளது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவும் ஒரேயொரு கையெழுத்து போதும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், அரசு அதனை செய்ய மறுக்கிறது. கேட்டால், தமிழகத்தின் வருமானமே மதுபான விற்பனை தான் என சொல்லாமல் சொல்லி செல்கின்றனர் அல்லது அந்த கேள்வியை தவிர்த்து விடுகின்றனர். 

ஒருவேளை பூரண மதுவிலக்கு அல்லது அடுத்த ஊரடங்குக்கு (மூன்றாவது கொரோனா அலை ஏற்படுமாயின்) ஏற்பட்டு மதுபான கடைகள் மூடப்படுமாயின், தமிழக அரசு இந்த தருணத்தை உபயோகம் செய்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம். 

கள்ளச்சாராய விற்பனையை குறைக்கவும், கடத்தல் போலி மதுக்களின் விற்பனையை குறைக்கவும் கைதாகும் நபர்களின் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் தொடர் குற்றங்கள் ஒரே காவல் எல்லைக்குட்டபட்ட பகுதியில் நடக்குமாயின் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்தால் இது போன்ற கள்ளச்சாராய பிரச்சனை குறையும். 

வருவாய், வட்டாட்சியர், மதுவிலக்கு படையினருக்கு உரிய அதிகாரம் வழங்கி கள்ளச்சாராய பிரச்சனையை குறைக்க வழிவகை செய்யலாம். அவர்கள் அதிகாரத்தை தவறுதலாக உபயோகம் செய்யாமல் இருக்க அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கண்காணிக்கலாம். அரசின் ஆலோசனை குழுக்களுக்கு இப்படியான பல திட்டங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் பட்சத்தில், மதுவும் கள்ளசாராயமும் தமிழகத்தில் இருந்து ஒழியும்.

பல வருடமாக சீரழிந்த தமிழகத்தை ஒரு கையெழுத்தில் மாற்றலாம். முதலில் சிறிது இழப்பும், பிரச்சனையும் வரும். அந்த சவாலை எதிர்கொண்டு அரசு இதனை செயல்படுத்தினால் மட்டுமே எதிர்கால சந்ததிகள் நல்ல வாழ்க்கையை வாழலாம். 

மதுபான விவகாரத்தில் சப்பைக்கட்டு கட்டி அதோ சிக்ஸர், இதே சிக்ஸர் என்று வெட்டி விளம்பரம் செய்வதில் எள்ளளவும் புண்ணியமில்லை.. அந்த ஆட்சி கட்சி செய்யும், இந்த ஆட்சி கட்சி செய்யும் என்று தமிழக மக்கள் ஏமார்ந்து போதும், இந்த அரசாவது இதனை செய்யும் என்று எதிர்பார்ப்போம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin Sixes about Tasmac Open Against TN Peoples Request 15 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->