வியக்க வைக்கும் எல்லோர கைலாசநாதர் திருக்கோவில்.! அனைவரும் சென்று பார்க்கவேண்டிய இடம்.!!
kailasanathar temple
ஒற்றைக்கல்லில் ஒரு சிலையை வடித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், ஒற்றைபாறையில் ஒரு கோவிலையே வடித்துள்ளார்கள் என்றால், இது ஆச்சர்யம் மட்டுமல்ல வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா மலையில் குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில்தான் எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த கோவிலின் அடி முதல் நுனி வரை மலையை குடைந்தே வடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலானது பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள கோவில் போல் காட்சி அளிக்கிறது.

ஆச்சர்யத்தை அள்ளும் கோவிலின் சிறப்பு :
இக்கோவில் மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி செங்குத்தாக செதுக்கப்பட்டிருக்கிறது. மலையைக் குடைந்து, அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி எடுத்து, மீதமுள்ள பாறைகளை சிறு சிறு பிரிவுகளாகப் பிரித்து, தனித் தனிச் சன்னிதிகளாகவும், யானைகளாகவும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இக்கோவிலை கட்ட வெளியிலிருந்து சிறு கல்லைக்கூட எடுத்து வரவில்லை என்பது தான் விசேஷமே.

இந்த ஆலயத்தின் கோபுரம் இரட்டை அடுக்கு கொண்டு அமைந்திருக்கிறது. மேலும், ஆலய விமானம் 3 அடுக்கு கொண்டது.
இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் கைலாசநாதர் மேற்குதிசை பார்த்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானின் கைலாய மலையை போலவே இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக சேர்க்கும் அளவுக்கு எல்லோர கைலாசநாதர் கோவில், உயர்ந்த கலையம்சத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.