"வாளுடன் ரீல்ஸ் – இன்ஸ்டா வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்!
Cops smack and lift the Instagram boy with a sword
கையில் அரிவாளுடன் மிரட்டும் வகையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட 23 வயது இளைஞர் நவீன்ஹரிஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சமூக வலைதளங்களில் இப்படியான பதிவுகள், ஜாதி, மத மோதலை தூண்டும், பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று கூறி காவல்துறையினர் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், மேலஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவன் நவீன்ஹரிஷ்.23 வயதான இவன் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்ஹரிஸை கைது செய்து வாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது ஆயுதங்களை வைத்துக்கொண்டோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து ரவுடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட வர்கள் மீது 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 197 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Cops smack and lift the Instagram boy with a sword