109 வகை உணவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து வைக்கும் பாஜக மாநில தலைவர்.!!
eps hosted feast in nainar nagendran house
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது இருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இந்த சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முடிவான நிலையில் இருகட்சியினரும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அதன்படி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற புரட்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் மாவட்டம் தோறும் சென்று பிரசாரம் செய்யும் இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திரளாக கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி நேற்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு நெல்லைக்கு வந்து ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். இன்று பிரச்சாரம் எதுவும் இல்லாததால் இரவு 7 மணிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட விருந்தில் கலந்துகொள்கிறார்.
இந்த விருந்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் முத்துபலவேசம், தமிழ்செல்வன், சித்ராங்கதன், விஸ்வை ஆனந்தன் உள்பட தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக நயினார் நாகேந்திரன் வீட்டில் சுமார் 10 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியை மேம்படுத்தும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் உணவு வகைகளை வடிவமைத்து பரிமாறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
English Summary
eps hosted feast in nainar nagendran house