30,000 கோடி அளவிலான வருவாய் இழப்பு; மே 15-ஆம் தேதிக்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..?
Will Petrol and Diesel Prices Rise by May 15th
ஈரான் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிசக்தி தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) மாதந்தோறும் சுமார் ₹30,000 கோடி அளவிலான வருவாய் இழப்பைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. இதனால்,இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மே 15-ஆம் தேதிக்குள் லிட்டருக்கு ₹4 முதல் ₹5 வரை உயரக்கூடும் எனத் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. ஹார்முஸ் நீர்வழிப்பாதை வழியாகவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் செல்கிறது.
இப்பகுதியில் பல வாரங்களாக நீடிக்கும் மோதலும் நிலையற்ற தன்மையும் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைந்துள்ளது. அத்துடன், சரக்கு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தி, எண்ணெய் டேங்கர்களுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கடுமையாக அதிகரித்துள்ளதால் கப்பல் போக்குவரத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலைகள் அதிவேகமாக உயர்ந்துள்ளன. இது பல நாடுகளிலும் எரிபொருள் விலைகளை வெகுவாக பாதித்துள்ளது. தற்போது ஹாங்காங்கில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ₹295 ஆகவும், சிங்கப்பூரில் சுமார் ₹240 ஆகவும், நெதர்லாந்தில் ₹225 ஆகவும், இத்தாலியில் ₹210 ஆகவும், ஐக்கிய இராச்சியத்தில் சுமார் ₹195 ஆகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல பொருளாதார நாடுகள், இறக்குமதிச் செலவுகள் அதிகரித்ததால் ஏற்பட்ட சுமையை, எரிபொருள் விலையை அதிகரித்து நுகர்வோர் மீது சுமத்தத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Will Petrol and Diesel Prices Rise by May 15th