திடீர் திருப்புமுனை...! 2 வார போர்நிறுத்தம்... ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் ஒப்புதல்...! காரணம் என்ன...?
sudden turning point tension 2 week ceasefire Iran approves opening Hormuz What reason
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்த நிலையில், தனது கட்டுப்பாட்டில் உள்ள உலகின் முக்கிய கடல் வாயிலான ஹார்முஸ் நீரிணையை ஈரான் தற்காலிகமாக மூடியது. இதனால் வளைகுடா நாடுகளிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வரத்து குறைந்ததால், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல நாடுகள் சமையல் எரிவாயு பற்றாக்குறை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையை உடனடியாக திறக்க ஈரானுக்கு கடும் காலக்கெடு விதித்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், “இன்றிரவு ஒரு நாகரீகத்தின் முடிவை உலகம் காணக்கூடும். அது மீண்டும் திரும்ப முடியாத அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை; ஆனால் அந்த நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது,” என எச்சரிக்கை விடுத்தார். இந்த காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியுடன் நிறைவடைய இருந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க, இந்த காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தள பதிவில், “பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால், இரண்டு வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்த தயாராக உள்ளேன். இது ஒரு இருதரப்பு போர் நிறுத்தமாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
மேலும், “ஈரானில் முக்கியமான அனைத்து ராணுவ இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன. நீண்டகால அமைதிக்கான ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து 10 அம்சங்களைக் கொண்ட முன்மொழிவு கிடைத்துள்ளது. அது பேச்சுவார்த்தைக்கு வலுவான அடித்தளமாக அமையும்.
கடந்த கால கருத்து வேறுபாடுகளில் பல அம்சங்களில் புரிதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இன்னும் இரண்டு வாரங்கள் தேவைப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த இடைக்கால போர் நிறுத்தத்தை முன்னிட்டு, இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் நீரிணையை திறக்க ஈரான் சம்மதித்துள்ளது.
இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தானுக்கு ஈரான் தனது நன்றியை தெரிவித்துள்ளது. நிரந்தர அமைதியை நோக்கி அடுத்த கட்டமாக, வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் முக்கிய அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
முன்னதாக, ஷெபாஸ் ஷெரீப் தனது சமூக வலைதள பதிவில், “ஈரான் மற்றும் அமெரிக்கா, அவர்களது கூட்டாளிகளுடன் இணைந்து, லெபனான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விவேகமான முடிவை மனதார வரவேற்கிறேன்.
இரு நாடுகளின் தலைமைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், ஏப்ரல் 10ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரு தரப்பினரையும் அழைக்கிறேன். இந்த சந்திப்பு நீடித்த அமைதிக்கான புதிய வாயிலாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
sudden turning point tension 2 week ceasefire Iran approves opening Hormuz What reason