மதுரை, வேலூர் உள்ளிட்ட 08 மாவட்டங்களில் நாளை சுட்டெரிக்கும் சூரியன்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Tomorrow the temperature will be higher in 08 districts including Madurai and Vellore
''தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.'' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜூலை 28 முதல் 31-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 01-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் 02 செமீ, நீலகிரி மாவட்டம் பந்தலூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தலா 01 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Tomorrow the temperature will be higher in 08 districts including Madurai and Vellore