"வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வாருங்கள்"... தனுஷ் சொன்ன ஒரு வார்த்தை என் வாழ்க்கையை மாற்றியது: நடிகை ரம்யா ரங்கநாதன்
Quit your job and come into cinema One word from Dhanush changed my life Actress Ramya Ranganathan
நடிகர் தனுஷ் கூறிய ஒரு அறிவுரையே தனது வாழ்க்கையின் முக்கிய திருப்பமாக அமைந்தது என்று நடிகை ரம்யா ரங்கநாதன் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தன்னை முழுநேரமாக சினிமாவை தேர்வு செய்ய தனுஷ் ஊக்குவித்ததாக அவர் கூறியுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் வெளியான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா ரங்கநாதன். அந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படத்தில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரம்யாவின் நடிப்பு மற்றும் நடனத்திற்கு பாராட்டுகள் கிடைத்தன.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாரி இளவழகன் இயக்கிய 'அன்பே டயானா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படம் மூலம் நடிகையாக மேலும் கவனம் பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து ரம்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனது நடன வீடியோக்களை பார்த்த பிறகுதான் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பின் போது தனுஷ் சார் எப்போதும் வழிகாட்டிக்கொண்டே இருந்தார்" என்றார்.
மேலும், திரைப்படம் முடிந்த பிறகு தனது எதிர்காலம் குறித்து குழப்பத்தில் இருந்ததாகவும், அப்போது தனுஷ் அளித்த அறிவுரை தனது வாழ்க்கையை மாற்றியதாகவும் கூறினார்.
"நான் வேலையை விட்டு வர தயங்கினேன். ஏனெனில் மாதந்தோறும் நிலையான வருமானம் இருந்தது. அப்போது தனுஷ் சார், 'என்னை நம்புங்கள். உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள். முழுமையாக சினிமாவுக்கு வாருங்கள்' என்று கூறினார். அந்த வார்த்தைகளை நம்பித்தான் நான் வேலையை விட்டேன். அந்த முடிவுதான் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது" என்று ரம்யா தெரிவித்துள்ளார்.
ரம்யாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், புதிய கலைஞர்களை ஊக்குவித்து வழிகாட்டும் தனுஷின் குணத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில், இது ரம்யா ரங்கநாதன் தனது தனிப்பட்ட அனுபவமாக பகிர்ந்த கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Quit your job and come into cinema One word from Dhanush changed my life Actress Ramya Ranganathan