சிவகாசி அருகே சிதறிய பட்டாசு ஆலை...! - தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்...!
Cracker factory collapses near Sivakasi Shocking news that 2 workers died
சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த குடோனில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிச்சத்தத்தால் அப்பகுதியே அதிர்ந்ததுடன், குடோனில் இருந்து கரும்புகை வானத்தை நோக்கி எழுந்தது.

விபத்து ஏற்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, குடோனுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கோர விபத்தில் சிக்கி 2 பேர் பலத்த காயங்களுடன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விபத்தில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து செங்கமலப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cracker factory collapses near Sivakasi Shocking news that 2 workers died