அதிர்ச்சி மோசடி...! 139 சவரன் நகைகளுடன் தலைமறைவாக முயன்ற அடகுக்கடை உரிமையாளர் சிக்கியது எப்படி...?
Shocking fraud How pawn shop owner caught trying escape 139 sovereigns of jewelry
தேனி மாவட்டத்தில் 64 வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 139 சவரன் நகைகளை திருப்பி வழங்காமல் தலைமறைவானதாக குற்றம்சாட்டப்பட்ட அடகுக்கடை உரிமையாளரை காவலர்கள் கைது செய்தனர்.தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன் (38).

இவர் ஆண்டிப்பட்டியில் நகை அடகுக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் ரமேஷ் உள்ளிட்ட 64 பேர் தங்களது நகைகளை அடகு வைத்திருந்தனர்.இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த மொத்தம் 139 சவரன் நகைகளை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்காமல் துரைமுருகன் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அவர் கடையை மூடிவிட்டு தலைமறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.நகைகளை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில், அடகுக்கடை உரிமையாளர் துரைமுருகன், அவரது தந்தை முருகேசன் மற்றும் கடையில் பணியாற்றிய ஸ்ரீமதி (26) ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் ஏற்கனவே ஊழியர் ஸ்ரீமதியை காவலர்கள் கைது செய்திருந்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கடை உரிமையாளர் துரைமுருகனை காவலர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று துரைமுருகனை காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் நகைகள் தொடர்பான விவரங்கள் குறித்தும், வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் நகைகள் எங்கு சென்றன என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Shocking fraud How pawn shop owner caught trying escape 139 sovereigns of jewelry