கர்நாடகா செல்ல தடை...! - ஓசூர் எல்லையிலேயே முடங்கிய தமிழக பேருந்துகள்... எல்லையில் போராட்டம், பயணிகள் கடும் அவதி...!
Ban travelling Karnataka Tamil Nadu buses stranded Hosur border Protest border passengers suffering greatly
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினைக்கு இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கர்நாடக அரசின் இந்த அணைத் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், மேகதாது அணை கட்டும் முயற்சியை கண்டித்து தமிழக விவசாயிகளும் பல்வேறு கட்டங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, காவிரி விவகாரத்தை முன்வைத்து தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லை பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் கர்நாடகா செல்ல வேண்டிய பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
அதேவேளையில், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பேருந்துகள் வழக்கம்போல் எந்தவித தடையும் இன்றி இயக்கப்பட்டு வருகின்றன.மற்றபடி, கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் எல்லையை கடந்து சென்று வருகின்றன.
ஓசூரில் இருந்து கர்நாடகா செல்லும் பயணிகள், தமிழக எல்லை வரை இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் சென்று, அங்கிருந்து ஆட்டோ மூலம் அத்திப்பள்ளி பகுதிக்குச் செல்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் பெங்களூரு செல்கின்றனர்.இதனிடையே, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Ban travelling Karnataka Tamil Nadu buses stranded Hosur border Protest border passengers suffering greatly