''போதைப்பொருள் விற்று சேர்க்கும் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட வேண்டும்''; முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு..!
Former DGP Shailendra Babu says assets used to sell drugs should be confiscated
புதுச்சேரி கடற்கரை சாலையில் தனியார் அமைப்பு சார்பில் ''போதைப்பொருட்களுக்கு நோ சொல்வோம்'' என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் அமைச்சர் ராஜவேலு, தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரம், சீனியர் எஸ்பிக்கள், எஸ்பிக்கள் மற்றும் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலையில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், எஸ்.வி.படேல் சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம், சுப்பையா சாலை வழியாக கடற்கரைச் சாலையை அடைந்து காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
இதன்போது தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''இனி போதைப்பொருள் இருக்கக்கூடாது என்ற முறையில் மாரத்தான் நடத்தியுள்ளனர். 05 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடியுள்ளனர். மாணவர்களே, மற்றவர்கள் செய்ய முடியாத காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

அப்போது தான் இந்திய நாடு, தமிழகம் சாதனை படைக்க முடியும். கெட்ட பழக்கங்களும், எல்லா விதமான போதைப் பொருட்களும் மிகவும் ஆபத்தானவை. உடல், மனம், வேலை, குடும்பம் எல்லாவற்றையும் கெடுக்கும் என்று சுட்டிக்காட்டி பேசினார்.
ஆகவே, கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு மனம், உடல் உறுதியுடன் நல்ல மனிதனாக மாற வேண்டும் என்றும், மற்றவர்கள் நம்மை பாராட்டும் வகையில் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் எனவும், தமிழக காவல்துறையில் போதைப்பொருள் ஒழிப்புக்கென்று தனி துறை இருக்கிறது. அது சிறப்பாக செயல்படுகிறது என்று தெரிவித்தார்.
அத்துடன், தமிழக அரசு, அவர்களுக்கு காலம் காலமாக முழு ஆதரவு கொடுத்து வருகின்றது. ஆனால், இப்போது ஒரு தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும், நான் டிஜிபியாக இருக்கும்போது கஞ்சா வேட்டை 1, 2, 3 என்று திட்டமிட்டு பெரிய அளவில் கஞ்சா வியாபாரம் செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுடன் அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தோம் என்று செய்தியாளர்களிடம் நினைவு கூர்ந்தார்.

அதேபோன்று தமிழக காவல்துறை போதைப்பொருள் விற்று சேர்க்கும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட வேண்டும் எனவும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சில நாட்களுக்கு மட்டும் அமல்படுத்திவிட்டு திடீரென விட்டுவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இது காவல்துறைக்கு மட்டும் பொறுப்பு என்று சொல்ல முடியாது. சமுதாயத்தில் ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டிய மிகப்பெரிய போர்தான் இந்த போதைப்பொருள் தடுப்பு. இதனை சாதாரனமாக சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
ஒட்டுமொத்த இந்திய மக்களும் புதுச்சேரியில் தான் வாழ்கின்றனர் என்றும், அதாவது, புதுச்சேரி சிறிய மாநிலம் அல்ல முழுமையான இந்தியா என்று சொல்லலாம். பல்வேறு விதமான மக்கள் இருக்கின்றனர். புதுச்சேரி மக்கள் பிரெஞ்சு மொழியை கற்றுக்கொள்ளலாம். ஒரு மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்றும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி மக்கள் எல்லா நாடுகளுக்கும் சென்று குடியேற வேண்டும். இங்கேயே இருக்கக்கூடாது. படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும். உலகத்தை சுற்றிவிட்டு வாருங்கள். இப்போது இருக்கின்ற உடல் வலிமை இந்தியா, தமிழகம், புதுச்சேரிக்கு பத்தாது எனவும் கூறினார்.
அத்துடன், உலக கால்பந்து போட்டியில் விளையாட நமக்கு அனுமதி இல்லை. 1.50 லட்சம் மக்கள் வாழும் நாட்டில் இருந்து சென்று கால்பந்து விளையாட தகுதி இருக்கிறது. ஆனால் 150 கோடி மக்கள் நாம் கால்பந்து விளையாட தகுதி இல்லை என்றால் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லை என்று தனது கவலையை வெளிப்படுத்தியதோடு, அதற்கு உடலில் உரம் இல்லை என்று அர்த்தம் என்று தெரிவித்தார். வரக்கூடிய தலைமறையையாவது உடல் மற்றும் மனதளவில் உறுதியான மக்களாக உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு தெரிவித்தார்.
English Summary
Former DGP Shailendra Babu says assets used to sell drugs should be confiscated