செங்கமலப்பட்டி சட்டவிரோத பட்டாசு ஆலை விபத்து; பலி எண்ணிக்கை 04-ஆக உயர்வு; 11 பேர் கைது..!
Death toll in Chengamalapatti illegal firecracker factory accident rises to 04 and 11 people arrested
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் தகரக் கொட்டகை ஒன்றில், சட்டவிரோத பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.
இன்று வழக்கம்போல் காலை 05 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது இருந்த தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீயணைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இடுபாடுகளில் சிக்கி கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, ஐயப்பராஜ் மற்றும் பாண்டித்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது காயமடைந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளரான திருப்பதி (37), திருத்தங்கலை சேர்ந்த முத்துக்குமார் (41), கணேசன் (50), ஞானசேகரன் (49), நாகார்ஜுன் (29), ராஜசேகர் (36), அந்தோணி ராஜ் (26), ஜெயசேகர் (30), நாரணாபுரத்தை சேர்ந்த முனியசாமி (32), முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சங்கிலி திருமுருகன் (27), அருள் குமார் (35) ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Death toll in Chengamalapatti illegal firecracker factory accident rises to 04 and 11 people arrested