வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
IMD new low pressure area Bay of Bengal
வங்கக்கடலில் நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று (அக். 22) தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (அக். 23) காலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக உள் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இடங்களில் காணப்பட்டது. பின்னர் இது தெற்கு உள் கர்நாடகப் பகுதிகளை நோக்கி நகர்ந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகரும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய மற்றொரு தாழ்வு மண்டலம் இன்று காலை வரை அதே பகுதியில் நிலைத்து, வடமேற்கு திசையில் நகரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இதன் விளைவாக, நாளை (அக். 24) தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுமா அல்லது வலுவிழக்குமா என்பது அதன் நகர்வை பொருத்தே தீர்மானிக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் சில இடங்களில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
English Summary
IMD new low pressure area Bay of Bengal