வெயிலுக்கு குட்பை... மழையோடு வெல்கம்...! நாளை மறுநாள் அதிரடியாகத் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை...!
Goodbye sun Welcome rain southwest monsoon start earnest day after tomorrow
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடையின் தாக்கம் குறைந்து, மழைக்காலத்தின் வருகையை இயற்கை அறிவிக்கத் தொடங்கியுள்ளது. மே மாதத்தின் மூன்றாவது வாரத்திலேயே பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய நிலையில், பல இடங்களில் பரவலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக பல பகுதிகளில் மழையின் தீவிரமும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 4-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி கேரளக் கரையை அடையும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு சில நாட்கள் தாமதமாக வரவுள்ளது. தென் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த தாமதத்திற்கான முக்கிய காரணமாக கருதப்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, வருகிற வியாழக்கிழமை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவுகள் மற்றும் கேரளப் பகுதிகளில் பருவமழை தனது பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல், வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு கடற்பரப்புகளிலும் பருவமழை முன்னேறுவதற்கான அனைத்து சாதகமான வானிலை அமைப்புகளும் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இயல்பை விட சற்று தாமதமாக தொடங்கினாலும், தென்மேற்கு பருவமழையின் வருகை விவசாயிகள், நீர்நிலைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Goodbye sun Welcome rain southwest monsoon start earnest day after tomorrow