சென்னைவாசிகளே உஷார்... 5 நாட்களுக்கு ‘வெப்பக் கொடுமை’...! அனல் காற்றால் வறுக்கப் போகும் சென்னை...! - வானிலை மையம் அதிர்ச்சி எச்சரிக்கை!
Chennai residents beware Heat torture 5 days Chennai going fry due hot winds Meteorological Department warns shock
தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று வெப்பத்தின் உச்சக்கட்டம் பொதுமக்களை கடுமையாக வாட்டியது. குறிப்பாக தலைநகர் சென்னை முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலும், அனல் பறக்கும் காற்றும் இணைந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.
சென்னையில் நேற்று 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகியிருந்தது. கோடை காலத்தின் கடுமையான வெப்ப நாளாக அமைந்த நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. மதிய நேரங்களில் சாலைகள் வெப்பத்தை உமிழ்ந்த நிலையில், அனல் காற்று நேரடியாக முகத்தில் தாக்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் சாலையோர நிழற்பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். மாலை 4 மணி கடந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்தது. தமிழகம் முழுவதிலும் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான நகரமாக சென்னை இருந்தது குறிப்பிடத்தக்கது.
பகலில் கொதித்த வெப்பம், இரவிலும் குறையாமல் நகரம் முழுவதும் உஷ்ணத்தை பரப்பியது. இதனால் பொதுமக்கள் வியர்வை, புழுக்கம் மற்றும் தூக்கமின்மை போன்ற அசாதாரண நிலைகளை எதிர்கொண்டனர். சாலைகளில் வீசிய வெப்ப காற்றால் பேருந்து, ரெயில் மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்தவர்களும் கடுமையாக அவதிப்பட்டனர்.
குறிப்பாக சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், மேலும் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் தீவிரமாகவே நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் துரை விளக்கமளிக்கையில், வடமேற்கு திசையிலிருந்து வீசும் அனல் காற்றின் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் கடும் வெப்பநிலை நிலவும் என்று தெரிவித்தார்.
மேலும், 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், இதே நிலை அடுத்த 5 நாட்களும் தொடர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலையுடன் கூடிய ஈரப்பதமும் இணைவதால் வடகடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மக்கள் கடுமையான அசவுகரியத்தை சந்திக்க நேரிடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Chennai residents beware Heat torture 5 days Chennai going fry due hot winds Meteorological Department warns shock