இனி தப்பிக்கவே முடியாது! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 அதிநவீன கேமராக்கள்...! - கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் ரயில்வே காவலர்கள்!
There no escape now 223 state of the art cameras at Central Railway Station Railway guards intensify surveillance
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் பாதுகாப்பு வளையத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில், அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் 223 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் விரிவான பணிகள் வேகமெடுத்து வருகின்றன.
இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், ஏற்கெனவே நடைமேடைகள் மற்றும் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கருவிகள் செயல்பட்டு வந்தாலும், அவை வழக்கமான காட்சிகளை மட்டுமே பதிவுசெய்யும் தன்மையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீப காலமாக உரிய ஆவணங்களின்றி தங்கம், வெள்ளி, ஹவாலா பணம் மற்றும் போதைப் பொருள்கள் ரெயில்கள் மூலம் கடத்தப்படுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கணிசமான அளவில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் இந்த அச்சத்தை உறுதிப்படுத்துவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளுடன் தொடர்பில்லாத பலர் நீண்ட நேரம் தங்கியிருப்பதாகவும், இதனால் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரெயில் நிலையத்தை முழு நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கும் வகையில் புதிய கண்காணிப்பு அமைப்பை உருவாக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டன.
இடைக்கால தடைகள் காரணமாக பணிகள் தற்காலிகமாக நின்றுபோன நிலையில், தற்போது அவை மீண்டும் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ரெயில் நிலையத்தின் 19 முக்கிய இடங்களில் உயர்கம்பங்கள் நிறுவப்பட்டு, அவற்றில் அதிநவீன திறன் கொண்ட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
ஒரே திசையில் நிலையான கண்காணிப்பை மேற்கொள்ளும் 150 நிலைக் கேமராக்கள், மிகத் தெளிவான காட்சிகளைப் பதிவு செய்யும் 45 உயர்தர ஒளிப்பதிவு கருவிகள், அனைத்து திசைகளிலும் சுழன்று கண்காணிக்கும் 14 சுழற்சி கேமராக்கள் மற்றும் தொலைதூரக் காட்சிகளையும் பெரிதாக்கிப் பதிவு செய்யும் 7 சிறப்பு கண்காணிப்பு கருவிகள் என மொத்தம் 223 கேமராக்கள் இந்த மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்த முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
There no escape now 223 state of the art cameras at Central Railway Station Railway guards intensify surveillance