நிலநடுக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் என்னென்ன?
causes of earthquakes
குறிப்பிட்ட நிலப்பகுதியில் குறைந்த நேரத்தில் புவியில் திடீரென ஏற்படுகின்ற அதிர்வே நிலநடுக்கம் ஆகும். நில அதிர்வுகள் பெரும்பாலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே நிகழ்கின்றன.
சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கூட நீடிக்கலாம். புவிக்குள்ளே நில அதிர்வு எந்த இடத்தில் தோன்றுகிறதோ அந்தப் புள்ளியே நிலநடுக்க மையம் எனப்படும். நிலநடுக்க மையப்புள்ளிக்குச் செங்குத்தாகப் புவியின் மேற்பரப்பில் உள்ள புள்ளி நிலநடுக்க வெளி மையம் எனப்படும்.
நிலநடுக்கம் என்பது புவியின் உட்பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் அதிர்வுகள் ஆகும்.
நிலநடுக்கத்திற்கான காரணங்கள் :
நிலப்பலகைகளின் நகர்வு
புவியின் உட்பகுதியில் ஏற்படும் பாறைப் பிளவு
பாறைகளின் நகர்வு
எரிமலை வெடிப்பு
மிகப்பெரிய அளவில் கட்டப்படும் அணைகளின் அழுத்தம்
சுரங்கத் தொழில்கள் மற்றும் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் அளவிற்கு மிகுதியாக பயன்படுத்துதல்
நிலநடுக்கத்தின் விளைவுகள் :
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அவற்றில் பெரும்பாலானவை சக்தி குறைந்தவை. சுக்தி வாய்ந்த நிலநடுக்கங்களே பேரழிவை ஏற்படுத்துகின்றன.
நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களும் இடிந்து விழுகின்றன. ஊர்களும், நகரங்களும் தரைமட்டமாகின்றன.
இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிர்சேதம் ஏற்படுகின்றது.
சாலைகளும், ரயில் பாதைகளும் சேதமடைகின்றன. போக்குவரத்து தடைபடுகிறது. குழாய் இணைப்புகள் முற்றிலும் சேதம் அடைகின்றன.
தொலைத்தொடர்பு, மின்சாரம், சமையல் வாயு, தண்ணீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்படுகின்றன.
நிலநடுக்கத்தால் சில இடங்கள் தீப்பிடித்து விடுகிறது. மேலும் நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்படுகிறது. நிலச்சரிவு பள்ளத்தாக்குகளில் விழுந்து ஓடும் ஆறுகளின் குறுக்கே தடையாக அமைகின்றது.
அதனால் ஆற்றின் பாதை மாறுகின்றது அல்லது நீர்த்தேக்கம் ஏற்பட்டு சுற்றுப்புறம் நீரில் மூழ்குகின்றது.