'100 நாள் வேலைத்திட்டத்தை நீக்கியது கருப்புச் சட்டம்'; நாடு தழுவிய போராட்டத்திற்குஅழைப்பு விடுத்துள்ள சோனியா..!
Sonia has called for a nationwide protest to oppose the scrapping of the 100 day employment scheme
20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி என்ற 100 நாள் வேலைத் திட்டத்திற்குப் பதிலாக ஒரு புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, 100 நாட்கள் வேலையானது, 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும் என்ற நிலை உள்ளது.
ஆனாலும், இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் எதிர்த்து பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ,காங்கிரஸ் எம்பி சோனியா காந்தியும் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியுள்ளதாவது:
20 ஆண்டுக்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது, கிராமப் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தியது, மகாத்மா காந்தியின் கனவுகளை முன்னெடுத்துச் சென்றது என்று பேசியுள்ளார்.
அத்துடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பாஜ அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இது உழைக்கும் மக்கள் மீதான புல்டோசர் தாக்குதல் என்று தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு கட்சி விவகாரம் அல்ல, தேச நலன் சார்ந்தது என்றுகூறியுள்ளதோடு, 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியது மட்டுமல்லாமல், அந்தத் திட்டத்தின் கட்டமைப்பையும் மத்திய அரசு மாற்றியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எந்த விவாதமும் நடத்தாமல், எதிர்க்கட்சியினரை கலந்தாலோசிக்காமல், இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் திணிக்கப்பட்டுள்ளன என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், மோடி அரசு நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களை சிதைத்துள்ளதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு கிராமப்புற ஏழைகளின் நலன்களைப் புறக்கணித்து வருகிறதாகவும் சோனியா தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கருப்புச் சட்டத்தை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்த்து போராட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, என்னைப் போன்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களுடன் அதற்கு துணை நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Sonia has called for a nationwide protest to oppose the scrapping of the 100 day employment scheme