ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 04 பேர் நீக்கம்; இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது; எடப்பாடி பழனிசாமி அதிரடி..!
Four AIADMK functionaries from Ramanathapuram district have been expelled
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சில நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வருகிறார். அதன்படி, கட்சியின் மூத்தவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கட்சியின் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதாவது, அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் போன்றோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தி கேட்டு விதித்ததாலும், தேவர் ஜெயந்தி நிகழ்வில் ஓபிஎஸ், தினகரன் உடன் ஒரே காரில் சென்று கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றதால் செங்கோட்டையன் மீது இபிஎஸ் நடவடிக்கை எடுத்தார். அதனை தொடர்ந்து, செங்கோட்டையனின் ஆதரவாளர் முன்னாள் எம்.பி. சத்யபாமா உட்பட 13-14 நிர்வாகிகள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு;
அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்டபம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளரும், மண்டபம் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதியுமான எல்.சீனி காதர் மொய்தீன், மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் எம்.ஏ.பக்கர், மண்டபம் பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் ஆகியோர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’’ என அறிவித்துள்ளார்.
English Summary
Four AIADMK functionaries from Ramanathapuram district have been expelled