கொலை களமாக மாறியுள்ள தமிழகம்; 24 மணிநேரத்தில் 08 கொலைகள்! மெத்தனப் போக்கில் இருக்கிறதா காவல்துறை..? முதல்வர் என்னதான் செய்கிறார்..?
What is the police doing when eight murders have taken place in Tamil Nadu in the last 24 hours
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் சென்னையின் புறநகர் பகுதிகள் தொடங்கி கன்னியாகுமரி வரை நேற்று ஒரே நாளில் மட்டும் அடுத்தடுத்து 08 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் தகராறு, முன்பகை, கள்ளக்காதல், போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலை சம்பவங்கள் நடந்துள்ளமை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 09-ஆம் தேதி கள்ளக்காதல் விவகாரத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் மாற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்து, சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வாலிபர் ஒருவரின் தலையில் கல்லை போட்டுக் கொடூரமாக கொலை செய்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தப்பி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்ததாக கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மதுபான கடையில், மaது குடித்துவிட்டு காலி பாட்டிலை பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த வாலிபர் அருண்குமார் (32) என்பவரை கடையில் இருந்த தந்தையும் மகனும் சேர்த்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.

மேலும், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே, இளைஞர் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
அடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வாலிபர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த மர்ம நபர்கள், அவரது சடலத்தை அங்குள்ள குளத்தில் வீசி சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சுமார் 02 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்த வாலிபரின் சடலத்தை மீட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான கொலை சம்பவங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் வேறு சில இடங்களிலும் நடந்த கொலைகளையும் சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக அரங்கேறும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், தவெக ஆட்சியில் சட்டஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், காவல்துறை மெத்தனப்போக்கில் உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
English Summary
What is the police doing when eight murders have taken place in Tamil Nadu in the last 24 hours