அமைச்சர் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு...? - கொதிக்கும் டாஸ்மாக் தொழிற்சங்கங்கள்...!
What about promise made by minister TASMAC unions
பணி நிரந்தரம், முறையான காலமுறை ஊதியம் மற்றும் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் மாற்று வழிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பிப்ரவரி 1 முதல் 19-ஆம் தேதி வரை தொடர் போராட்டத்தை முன்னெடுத்தது.
அப்போது, அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அண்மையில் ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அறிவிப்புகள் வெளியாகின.

இருப்பினும், இந்த அறிவிப்புகள் தங்களை வழிநெடுக ஏமாற்றமடையச் செய்துள்ளதாக ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், இன்று முதல் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகே மீண்டும் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து ஊழியர்கள் தெரிவிக்கையில்,"அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட பல அம்சங்களில், வெறும் ரூ.1,000 ஊதிய உயர்வு என்ற ஒற்றை அறிவிப்பு மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளது.
பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய மேலாண்மை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டது; ஆனால், அதிகாரப்பூர்வ அறிக்கையில் 'குழு' என்ற சொல்லே மாயமாகியுள்ளது.
இடைக்கால ஊதிய உயர்வாக நாங்கள் ரூ.5,000 கோரியிருந்த நிலையில், வெறும் ரூ.1,000 வழங்கி எங்களைக் கைவிட்டுள்ளனர். எனவே, எங்கள் கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து, ஏற்கெனவே உறுதியளித்தபடி முறையான மாற்று அறிக்கையை வெளியிட வலியுறுத்தி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
English Summary
What about promise made by minister TASMAC unions