“இளையராஜாவை அவமதிக்காதீர்கள்”.. பயில்வான் ரங்கநாதனை கடுமையாக சாடிய கங்கை அமரன்
Donot insult the younger king Gangai Amaran harshly criticized Payilvan Ranganathan
இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய கருத்துகளுக்கு நடிகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தெரியாத விஷயத்தை தெரிந்தது போல பேசக்கூடாது” என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற “உயிரிணையே” ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊடகங்கள் நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில், “இளையராஜா தனியாக இருக்கிறார், இட்லிக்கு கூட வழியில்லை” என்ற வகையில் பேசியது தொடர்பாக கேள்வி எழுந்தபோது, அதற்கு கங்கை அமரன் கடுமையாக பதிலளித்தார்.
“எதற்காக இல்லாத விஷயத்தை பேச வேண்டும்? அவர் வீட்டில் வந்து பார்த்தாரா? இவ்வளவு பெரிய சாதனையாளர் பற்றி இப்படி பேசுவது சரியல்ல. அவர் கஷ்டப்படுகிறார், குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள், யாரும் இல்லாமல் இருக்கிறார் என்று கூறுவது முற்றிலும் தவறு” என்றார்.
மேலும், “யுவன் ஷங்கர் ராஜா துபாயில் சந்தோஷமாக இருக்கிறார். கார்த்திக் ராஜாவும் தனது குடும்பத்துடன் நன்றாக இருக்கிறார். வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியிலிருப்பவர்களுக்கு தெரியுமா? வேண்டுமானால் ஒரு வாரம் வீட்டில் தங்கி பார்த்துவிட்டு பேசட்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கங்கை அமரன், “50 ஆண்டுகளாக இசைத்துறையில் சாதனை படைத்து வருகிறோம். எனக்கு 78 வயதுக்கு மேலாகிறது. அண்ணன் இளையராஜாவுக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. இப்படிப்பட்ட நிலையில் எங்களை இப்படி கேவலப்படுத்துவது மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றார்.
பயில்வான் ரங்கநாதனிடம் நேரடியாக தொலைபேசியில் பேசியதாகவும் அவர் கூறினார்.“நான் அவரிடம் போனில் கேட்டேன். ‘ஏன் இப்படிப் பேசினீர்கள்?’ என்று கேட்டபோது அவர் ‘மன்னித்து விடுங்கள்’ என்றார். இது மிகவும் மட்டமான செயல்” என்று கங்கை அமரன் தெரிவித்தார்.
இளையராஜாவின் தற்போதைய வாழ்க்கை முறை குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
“இளையராஜா தனிமையை விரும்புகிறார். நான் அவரை பார்க்கச் சென்றாலும் அமைதியாக அமர்ந்து இசை எழுதிக்கொண்டிருப்பார். அவரை அவராக இருக்க விடுங்கள். அவர்கள் அவர்களாக இருந்தால் தான் மேலும் உயர்வார்கள்” என்று கங்கை அமரன் உருக்கமாகப் பேசியுள்ளார்.
English Summary
Donot insult the younger king Gangai Amaran harshly criticized Payilvan Ranganathan