சிட்டா நகல் வழங்க லஞ்சமாக 'மீன் வறுவல், குழம்பு பார்சல்' கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்...! - கரூர் மாவட்டத்தில் அதிரடி!
Village Administrative Officer who asked fried fish and gravy parcel bribe provide copy Chitta dismissed Action Karur district
கரூர் மாவட்டத்தில் நிலத்தின் சிட்டா நகல் வழங்குவதற்காக பணத்துக்கு பதிலாக மீன் வறுவல் மற்றும் குழம்பு பார்சல் வாங்கி வருமாறு கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்துக்கு உட்பட்ட தேவர்மலை கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். விவசாயத் தொழில் செய்து வரும் இவர், வங்கிக் கடன் பெறுவதற்காக தனது நிலத்தின் சிட்டா நகலை பெற விண்ணப்பித்திருந்தார்.இந்த விண்ணப்பம் தொடர்பாக பேசுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், தேவராஜை செல்போனில் தொடர்புகொண்டுள்ளார்.

அப்போது, மறுமுனையில் பேசியது விவசாயியின் மகன் என்பதை அறியாமல், பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் இருந்து 2 மீன் வறுவலும், தனியாக குழம்பு பொட்டலமும் வாங்கி வருமாறு கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கிராம நிர்வாக அலுவலரின் இந்த கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த விவசாயியின் மகன், “அரசு உங்களுக்கு சம்பளம் வழங்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இருவருக்கும் இடையே நடைபெற்ற முழு உரையாடலையும் ஒலிப்பதிவாக பதிவு செய்துள்ளார். இந்த ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றதைத் தொடர்ந்து, குளித்தலை துணை ஆட்சியர் சேஷத்ரி விசாரணை நடத்தினார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். நிலத்தின் சிட்டா நகல் வழங்குவதற்காக மீன் வறுவல் மற்றும் குழம்பு பொட்டலம் கேட்கப்பட்டதாக எழுந்த புகார், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Village Administrative Officer who asked fried fish and gravy parcel bribe provide copy Chitta dismissed Action Karur district